நெல்லையில் கந்து வட்டி கும்பல் அராஜகம்: காங்கிரஸ் எம்.பி. ராமசுப்பு புகார்
நெல்லை: நெல்லையில் கந்து வட்டி கும்பல் அராஜகத்தினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படடுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராமசுப்பு புகார் தெரிவி்த்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளத்தில் உள்ள எங்கள் பெட்ரோல் நிறுவனத்தில், 12 ஆண்டுகளாக மேலாளராக பட்டமுடையார்புரம் அருணாச்சலம் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அருணாச்சலமும், அவரது உறவினர் திருநாவுக்கரசும் சேர்ந்து எங்கள் மீது போலீசாரிடம் பொய் புகார் கொடுத்துள்ளனர். இதில் சிறிதும் உண்மையில்லை. இது குறித்து போலீசாரிடம் உரிய முறையில் விளக்கி உள்ளேன்.
இந்த விவகாரம் பற்றி நாங்கள் விசாரித்த போது ஆலங்குளத்தைச் சேர்ந்த கந்துவட்டி கும்பலிடம் பணம் வாங்கி இருக்கிறார் அருணாச்சலம். இதற்காக 2 நபர்கள் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக கடனுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பி சென்றுள்ளது தெரிய வந்தது.
இது குறித்து செல்லப்பாண்டியன் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட சிலர் மீது காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளோம். இதே போல் மாவட்டத்தில் கந்துவட்டி கும்பல் அராஜகம் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.