எதிர்க்கட்சிகளின் ஒத்திவைப்புத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தால் அரசை ஆதரிப்போம்- திமுக
இந்த விவகாரம் தொடர்பாக 7வது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கிப் போயின. வாக்கெடுப்புடன் கூடிய ஒத்திவைப்புத் தீர்மானம் குறித்து எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக உள்ளதால், இந்த விவகாரத்தில் சுமூக நிலை ஏற்படாத நிலை காணப்படுகிறது.
இதையடுத்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது கூட்டணிக் கட்சிகளின் பலத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் வேலையில் இறங்கியுள்ளது.
முக்கியக் கூட்டணிக் கட்சிகளான திமுக மற்றும் திரினமூல் காங்கிரஸின் ஆதரவை அது பலப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த இரு கட்சிகளின் பிரதிநிதிகளுடன் காங்கிரஸ் தரப்பில் பேசியுள்ளனர். இந்த இரு கட்சிகளும் இதுவரை நேரடி அன்னிய முதலீடுகளை அனுமதிக்கும் அரசின் முடிவை திரும்பப் பெற வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது இந்த இரு கட்சிகளும் அரசுக்கு ஆதரவாக திரும்பியுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக திமுக தனது ஆதரவை உறுதிபட காங்கிரஸிடம் தெரிவித்து விட்டதாம். அரசுக்கு ஆதரவாக இருப்போம். அதில் சந்தேகம் வேண்டாம் என்று திமுக தரப்பில் கூறியுள்ளதால் காங்கிரஸ் தரப்பு நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளதாம்.
பாஜக விரித்துள்ள வலையில் விழுந்து விட வேண்டாம் என்று திமுகவையும், திரினமூல் காங்கிரஸையும் காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக் கொண்டனராம்.
கனிமொழி 'எபக்ட்'?
தி்முக அரசுக்கு ஆதரவாக திடீரென திரும்பியுள்ளதற்கு கனிமொழி ஜாமீனில் விடுதலையானதே காரணம் என்று ஒருதகவல் டெல்லி வட்டாரத்தில் பரவிக் கிடக்கிறது.