வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும்: சிபிஎம் கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த பெருமழை காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் 80க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் சாலைகள், தரைப்பலங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. தேங்கி கிடக்கும் மழைநீரால் தொற்று நோய் பரவும் ஆபத்து உள்ளது.
எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டுமென்றும், உயிரிழப்பு, உடமைகள், கால்நடைகள் இழப்பு, பயிர்கள் சேதம் உள்ளிட்டவற்றை கண்டறிந்து உரிய இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். சேதமடைந்த சாலைகள், பாலங்களை உடனடியாக செப்பனிடுவதோடு, தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.