சீனா என்னை பேயைப் பார்ப்பது போன்று பார்க்கிறது: தலாய் லாமா
கொல்கத்தா: இந்தியா எனக்கு பேச சுதந்திரம் கொடுப்பதற்கு சீனா எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கமான ஒன்று என்று திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா தெரிவி்ததுள்ளார். சீனா தன்னை பேயைப் பார்ப்பது போன்று பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் அன்னை தெரிசா பற்றி நடந்த விழாவில் திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமா கலந்து கொண்டு பேசினார். இந்த விழாவில் மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் கலந்து கொண்டார்.
தலாய் லாமா கலந்து கொள்ளும் இந்த விழாவில் ஆளுநரோ, முதல்வரோ கலந்து கொள்ளக் கூடாது என்று கோரி சீன தூதரகம் மேற்கு வங்க அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. அதைப் பொருட்படுத்தாமல் தான் நாராயணன் அந்த விழாவில் கலந்து கொண்டார்.
சீனாவின் எதிர்ப்பையும் மீறி விழாவுக்கு வந்துள்ளீர்களே என்று ஆளுநரிடம் கேட்டதற்கு, இது குறித்து நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.
உங்கள் வருகைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளதே என்று தலாய் லாமாவிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது,
சீனா எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கமான ஒன்று. அவர்களின் பார்வையில் அது சரி. அவர்கள் என்னை பேயைப் பார்ப்பது போன்று பார்க்கின்றனர். சீன தூதரகம் மேற்கு வங்க அரசுக்கு அனுப்பிய கடிதம் பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. கடந்த மார்ச் மாதம் அரசியல் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றேன். நான் இந்த பயணத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்றார்.
சீனா தலாய் லாமாவை எதிரியாகப் பார்க்கையில் இந்தியா அவரை ஒரு மதிப்புமிக்க மதகுருவாக பார்த்து அவருக்கு முழு பேச்சு சுதந்திரம் கொடுத்துள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் தாய்க்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் இந்த விழாவுக்கு வரவில்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்பி டெரக் ஓ பிரெய்ன் தெரிவி்த்தார்.