சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு- தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடைகள் அடைப்பு
சென்னை/டெல்லி: சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து தமிழகம் உள்பட நாடு முழுவதும் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம் நடந்து வருகிறது.
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்று, சில்லறை விற்பனையில் ஈடுபட்டுள்ள மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், துணிக் கடைகள் என எந்தவிதமான கடையும் திறக்கப்படவில்லை. 99 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை உள்பட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.
கோயம்பேடு வளாகத்திலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கடைகள் தமிழகம் முழுவதும் மூடப்பட்டுள்ளன.
வழக்கமாக காலையில் பால், காய்கறிகள் தருவதற்காக மட்டும் கடைகளை சிலர் திறந்து வைப்பார்கள். இந்த முறை அதையும் கூட தராமல் கடைகளை காலை முதலே யாரும் திறக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பால் கிடைக்காமல் சிரமப்பட நேரிட்டது.
இன்றைய ஒரு நாள் கடையடைப்பால் அரசுக்கு கிட்டத்தட்ட ரூ. 40 லட்சம் அளவுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படும் என வணிகர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.