மெரீனாவில் போலீசார், கல்லூரி மாணவர்களிடையே மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
சென்னை: மெரீனாவில் மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. போலீஸ் அதிகாரிகள் நடத்திய சமாதான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டது.
சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரி மாணவர்கள் சிலர் நேற்று மதியம் 2.30 மணிக்கு 2ஏ மாநகர பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது மாணவர்கள் வழக்கம் போல பேருந்தில் தாளம் தட்டியபடி ஆட்டம் போட்டதாக கூறப்படுகிறது. அதனை கண்டித்த பஸ் ஓட்டுநர் பஸ்சை சாலையோரத்தில் நிறுத்தினார்.
அப்போது அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், பஸ்சில் தாளம் போடுவது குறித்து மாணவர்களை கண்டித்துள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த மாணவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 2 தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதலில் முடிந்தது. அப்போது மாணவர்கள் சிலர் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அண்ணா சதுக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜீப் மீது கற்களை வீசி கண்ணாடியை உடைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த உதவி கமிஷனர் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், முருகேசன் ஆகியோர் போலீஸ் படையுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீஸ் படையை கண்டு பயந்த மாணவர்கள் கல்லூரிக்குள் ஓடிவிட்டனர்.
இதனையடுத்து இணை கமிஷனர் சேஷாயி, துணை கமிஷனர்கள் பாஸ்கரன், புகழேந்தி ஆகியோர் போலீஸ் படையுடன் கல்லூரிக்கு வந்தனர். அப்போது கல்லூரி மாணவர் யூனியன் தலைவர் தேவகிரண் போலீஸ் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கல்லூரி மாணவர்களை போலீசார் பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்ததால் தான் மோதல் ஏற்பட்டது. எனவே பொது இடங்களில் மாணவர்களை போலீசார் மதியாதையுடன் நடத்த வேண்டும் என்று தேவகிரண் போலீஸ் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
அதனை ஏற்றுக் கொண்ட போலீஸ் அதிகாரிகள் இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்து கொள்வதாக உறுதியளித்தனர். மேலும் பஸ்சில் பயணம் செய்யும் போது மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனை சுமூகமாக முடிந்ததால் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.