என்னைக் கைது செய்து விசாரியுங்கள்- டிஜிபி அலுவலகத்தில் ஸ்டாலின் அதிரடி
ஸ்டாலினின் அதிரடி வருகையால் டிஜிபி அலுவலகம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.
முன்னாள் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமது வீட்டை அபகரித்துக்கொண்டதாக ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த குமார் என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதியின் உத்தரவின் பேரின் மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஸ்டாலின் அவரது மகன் மற்றும் நண்பர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருச்சியிலிருந்து சென்னை வந்த மு.க.ஸ்டாலின் இன்று காலை நேராக டிஜிபி அலுவலகத்திற்குச் சென்றார். அவரது வருகை குறித்த தகவல் பரவியதும் திமுகவினரும், திமுக வக்கீல்களும் பெருமளவில் குவிந்தனர். இதனால அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மூத்த திமுக வக்கீல்களுடன் டிஜிபி அலுவலகத்திற்குள் சென்ற ஸ்டாலின் டிஜிபி ராமானுஜத்தை காண விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் அவர் அலுவலகத்தில் இல்லை. அதேபோல சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜார்ஜும் இல்லை. இதையடுத்து நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி ராஜேந்திரனை சந்தித்து ஒரு மனுவைக் கொடுத்தார் ஸ்டாலின்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இரண்டு கோரிக்கைகளை அவர்களிடம் எடுத்துக் கூறியுள்ளோம். ஒன்று, என் மீது போடப்பட்டிருக்கிற வழக்கு பொய் வழக்கு. கடைந்தெடுத்த பொய் வழக்கு. அதாவது நிலஅபகரிப்பு என்ற பெயரிலே சொல்லப்பட்டிருக்கிற அந்த வழக்கைப் பொறுத்தவரையில் அந்த சொத்துக்கும் எனக்கும், எனக்கு மட்டுமல்ல என்னுடைய குடும்பத்தில் உள்ள யாருக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.
வேண்டுமென்றால் அந்த வீட்டைப்பொறுத்த வரையில், என்னுடைய மகன் உதயநிதி அவர்கள் வாடகை அடிப்படையிலே அவர் தொழில் செய்துக்கொண்டிருக்கிற சினிமா கம்பெனி பெயரிலே, வாடகை அடிப்படையில் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அதிலே என்னுடைய மகளும், மருமகனும் குடியிருக்கிறார்களே தவிர, வேறு எந்த தொடர்பும் அந்த வீட்டைப் பொறுத்தவரையில் எங்களுக்கு நிச்சயமாக கிடையாது.
எனவே வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு பொய் வழக்கை மிரட்டியோ, அச்சுறுத்தியோ அல்லது பணம் பறிக்க வேண்டும் என்ற எண்ணத்திலோ அல்லது அரசியல் நோக்கத்தோடோ, ஏன் அதையும் தாண்டி காவல்துறையை தவறான வகையில் பயன்படுத்தி, இதற்காக அவர்களை பயன்படுத்தி மிரட்டி அந்தப் புகாரை பெற்றிருக்கிறார்கள். எனவே அந்த புகார் தந்திருக்கக்கூடிய அந்த நபர் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கோரிக்கையை எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.
ஃபஸ்ட் இன்ஃப்ரமேஷன் ரிப்போர்ட் தற்போது ஃப்ராட் இன்ஃப்ரமேஷன் ரிப்போர்ட்டாக மாறி இருக்கிறது. வழக்கமாக எப்ஐஆர் போட்டவுடன் என்ன செய்ய வேண்டும். அதிலும் அதிமுகஆட்சியில் கைது செய்யப்பட்டவுடன்தான் எப்ஐஆரே போடுகின்றனர். ஆனால் என்னை ஏன் இதுவரைக் கைது செய்யவில்லை என்று எனக்குப் புரியவில்லை. என்னைக் கைது செய்யப்பட்டும் என்று கேட்டுக் கொள்ளத்தான் டிஜிபி அலுவலகத்துக்கு வந்தேன். அங்கு உயர் அதிகாரிகள் யாரும் இல்லை. அங்கு கீழ்நிலை அதிகாரிகள் தான் இருந்தனர். எனவே அவர்களிடம் என்னை கைது செய்யுங்கள் என்று சொன்னபோது, அவர்கள் எந்தவித பதிலும் சொல்லவில்லை. எனவே தங்கள் தரப்பு நியாயத்தை சொல்லிவிட்டு வந்திருக்கிறோம் என்றார் ஸ்டாலின்.
பொய்யான குற்றச்சாட்டு
முன்னதாக ஸ்டாலின் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தன் மீதான புகாரை மறுத்தார்.
விலைவாசி உயர்வினால் கொதித்து போயுள்ள மக்களை திசை திருப்பவே தம்மீதும் தமது குடும்பத்தினர் மீதும் ஜெயலலிதா பொய் வழக்குப் போட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை, ஜெயலலிதாவைப் போல வாய்தா வாங்காமல் அதனை சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின் இது பொய்யான குற்றச்சாட்டு என்று கூறியுள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனே இதுபோன்ற வழக்குகளை தாம் எதிர்பார்திருந்ததாக கூறிய அவர், இந்த வழக்குகளை வாய்தா வாங்காமல் சட்டப்படி எதிர்கொள்வோம் என்றார். அதிமுக அரசை பொறுத்தவரை இது முதல் தகவல் அறிக்கையாக இருக்கலாம். ஆனால், என்னையும் மக்களையும் பொறுத்தவரை மோசடி தகவல் அறிக்கை என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திசை திருப்பும் வழக்கு
பேருந்து கட்டணம், பால்விலை உள்ளிட்ட போன்ற விலை வாசி உயர்வினால் மக்கள் கொதித்து போயுள்ளனர். அதிலிருந்து திசை திருப்பவே ஜெயலலிதா அரசு தம்மீது பொய் வழக்குப் போட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எந்த வழக்குப் போட்டாலும் அதனை சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.