போலீஸாரால் பலாத்காரம் செய்யப்பட்ட 4 பெண்களுக்கு தலா ரூ. 5 லட்சம்-அமைச்சர் வழங்கினார்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே போலீஸாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 4 இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகையை மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சணமுகம் இன்று வழங்கினார்.
திருக்கோவிலூர் அருகே உள்ள மண்டபம் என்ற பகுதியைச் சேர்ந்த இருளர் சமுதாய பெண்களான லட்சுமி, ராதிகா, கார்த்திகா, வைகேஸ்வரி ஆகியோரை திருக்கோவிலூர் போலீசார் கற்பழித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நான்கு போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட நான்கு பெண்களுக்கும் தலா ரூ. 5 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி அந்த நிதியை அமைச்சர் சண்முகம் இன்று விழுப்புரத்தில் அவர்களிடம் நேரடியாக வழங்கினார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் மணிமேகலை உள்ளிட்டோர் அப்போது உடன் இருந்தனர்.