ஆதி திராவிடர் மாணவர் விடுதிகள் கட்ட ரூ. 46.50 கோடி நிதி-ஜெ.
சென்னை: வாடகை கட்டடங்களில் இயங்கிவரும் ஆதி திராவிட மாணவர் விடுதிகளுக்கு 46.50 கோடி ரூபாய் செலவில் சொந்த கட்டடம் கட்ட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தவிட்டுள்ளார். இதற்காக முதற்கட்டமாக 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 1,254 ஆதி திராவிடர் நலவிடுதிகளும், 40 பழங்குடியினர் நல விடுதிகளும், 296 பழங்குடியினர் அரசு உண்டி உறைவிடப்பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இவற்றிற்கு சொந்த கட்டடங்கள் கட்டப்படவேண்டும் என்று முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இதன் அடிப்படையில், தற்பொழுது வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் 93 ஆதி திராவிட விடுதிகளுக்கு 46 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடம் கட்டிக் கொடுக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சொந்த கட்டடம்
தற்பொழுது சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு இடம் தயாராக உள்ள, வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் 42 விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்ட 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி ஈரோடு மாவட்டம், பவானி, தர்மபுரி மாவட்டம், தீர்த்தமலை, காளிப்பேட்டை, மொரப்பூர், தர்மபுரி, கரூர் மாவட்டம், புன்னம், கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் சந்தை, பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர், நெடீநுகுப்பை, ஆதனூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டம், ரெகுநாதபுரம், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, மதுரை ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி உள்ளிட்ட 42 இடங்களிலுள்ள ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு சொந்த கட்டடம் கட்டப்படும். தமிழக அரசின் இந்த நடவடிக்கையால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர் மிகவும் பயன்பெறுவர்.