கேரளா செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு : டி.ஜி.பி. ராமானுஜம் அறிவிப்பு
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஐயப்ப பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக டி.ஜி.பி ராமானுஜம் தெரிவித்துள்ளார்.
கேரளாக்காரர்கள் நடத்தி வரும் கடைகளை குறிவைத்து தாக்கியது தொடர்பாக இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக ஏற்பட்டுள்ள பதட்டத்தை தணிக்க கேரள - தமிழக எல்லை பகுதியில் தேவையான அளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் 500 போலீசாரும் 6 கம்பெனி சிறப்பு காவல் படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஐ.ஜி. மேற்பார்வையில் டி.ஐ.ஜி., 4 போலீஸ் சூப்பிரண்டுகள் அங்கு முகாமிட்டுள்ளனர். கடந்த 3 நாட்களாக அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடை பெறவில்லை. குமுளி, கம்பம், போடி பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தை சீரமைக்க பொது மக்கள் ஒத்துழைப்புடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஐயப்ப பக்தர்களுக்கு பாதுகாப்பு
கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போக்குவரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் குமுளி வழியாக செல்ல முடியாத நிலை உள்ளது. அவர்கள் செங்கோட்டை மார்க்கமாக செல்வதால் எந்த பிரச்சினையும் இல்லை. மீண்டும் குமுளி வழியாக சபரிமலைக்கு செல்வதற்கு ஓரிரு நாட்களில் ஏற்பாடு செய்யப்படும்.
மேலும் கேரளாக்காரர்கள் நடத்தி வரும் கடைகளை குறிவைத்து தாக்கியது தொடர்பாக இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் நடத்தி வரும் நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு, கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. தேவையான அளவுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கேரளா தலைமை செயலாளர் பிரபாகரன், டி.ஜி.பி. ஜேக்கப், போலீஸ் அதிகாரி ஹேமச்சந்திரன் ஆகியோருடன் பேசி இருக்கிறோம். கேரளா செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு பலத்த பாதுகாப்பு தருவதாக அவர்கள் கூறியுள்ளனர், என்று டி.ஜி.பி. ராமானுஜம் தெரிவித்தார்.