சேலம் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையை உடனே திறக்க சிபிஎம் கோரிக்கை
சேலம்: சேலம் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்காக உடனே திறக்க வேண்டும் என்று சிபிஎம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட 20 வது மாநாடு தோழர்.பி.ராமச்சந்திரன் நினைவரங்கில் துவங்கியது. இந்த மாநாட்டில் கட்சியின் செங்கொடியினை தோழர் பி.தர்மலிங்கம் ஏற்றி வைத்தார். பின்பு மாநில குழு உறுப்பினர் கே.ஜோதிலட்சுமி தலைமையில் பொது மாநாடு துவங்கியது.
இந்த மாநாட்டில் கிராம்சியின் சிந்தனை புரட்சி என்கின்ற நூலை பன்னீர் செல்வம் வெளியிட ராஜாத்தி பெற்றுக் கொண்டார். அதே போல மாசே துங் - கடவுள் அல்ல, ஒரு மனிதர் என்கின்ற நூலை குணசேகரன் வெளியிட நரசிம்மன் பெற்றுக் கொண்டார்.
இந்த மாநாட்டில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சேலம் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை கடந்த ஆட்சியில் திறக்கப்பட்டது.
ஆனால் தற்போதைய அதிமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மருத்துவமனையை மூடியுள்ளது. இதனை வன்மையாக கண்டிப்பதுடன் சேலம் உள்ளிட்ட 8 மாவட்ட மக்களின் நலன் கருதி மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்கு உடனே திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.