2ஜி வழக்கில் எஸ்ஸார்-லூப் டெலிகாம் நிறுவன அதிபர்கள் மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை
எஸ்ஸார் நிறுவன இயக்குனர் அனுஷ்மான் ருயா, துணைத் தலைவர் ரவி ருயா, குழுமத்தின் இயக்குனர் விகாஸ் சராப், லூப் டெலிகாம் உரிமையாளர்கள் கிரண் கெய்தான், ஐபி கெய்தான் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 420, 120 பி ஆகிய பிரிவுகளின் கீழ் ஏமாற்றுதல், கிரிமினல் சதி ஆகிய குற்றச்சாட்டுகளை சிபிஐ முன் வைத்துள்ளது.
வோடபோன் நிறுவனத்தில் 33 சதவீத பங்குகளை வைத்திருந்த எஸ்ஸார் நிறுவன உரிமையாளர்களான ருயா சகோதரர்கள், அதை வோடபோன் நிறுவனத்திடமே சமீபத்தில் விற்றுவிட்டு தொலைத் தொடர்பு வர்த்தகத்தில் இருந்து வெளியேறினர்.
ஆனால், 2008ம் ஆண்டு வோடபோன் நிறுவன பங்குகளை தங்களிடம் வைத்திருந்த இவர்கள், 21 மண்டலங்களில் கூடுதல் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெறுவதற்காக லூப் டெலிகாமை பயன்படுத்தினர். லூப் டெலிகாமுக்காக என்று சொல்லி ரூ. 1,450 கோடிக்கு 21 மண்டலங்களில் 2ஜி லைசென்ஸை பெற்றனர். இதை இவர்களுக்கு ஒதுக்கித் தந்தவர் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா.
லூப் டெலிகாமிலும் இவர்களது வோடபோன் நிறுவனத்துக்கு பங்குகள் இருந்தன. இதன்மூலம் லூப் டெலிகாம் பெயரில் வோடபோனுக்கு முறைகேடாக இவர்கள் ஸ்பெக்ட்ரம் பெற்றனர் என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
ஒரு மண்டலத்தில் இரு லைசென்ஸ்களில் ஒரு நிறுவனத்துக்கு 10 சதவீதத்துக்கும் அதிகமான பங்கு இருக்கக் கூடாது என்பது விதி. ஆனால், இந்த விதியை மீற லூப் டெலிகாம் பெயரை பயன்படுத்தி வோடபோனுக்கு அதிகமான லைசென்ஸை பெற்றுள்ளனர் என்று சிபிஐ தனது குற்றப் பத்திரிக்கையில் கூறியுள்ளது.
இதே வேலையைத் தான் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாமும் செய்தது. ஸ்வான் டெலிகாம் பெயரை பயன்படுத்தி ரிலையன்சுக்காக ஸ்பெக்ட்ரம் வாங்கினர் என்ற குற்றச்சாட்டில் தான் அந்த நிறுவனத்தின் 3 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு 7 மாதம் சிறையில் அடைக்கப்பட்டு, சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் எஸ்ஸார்-லூப் டெலிகாம் வழக்கில் ராசாவையோ அல்லது தொலைத் தொடர்பு அதிகாரிகளையோ சிபிஐ சேர்க்கவில்லை. இதில் அதிகாரிகள் சேர்க்கப்படாததால், இந்த வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வராது. இதை டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தான் விசாரிக்கும்.
இந்த வழக்கும் டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் நடக்கும் 2ஜி வழக்கு விசாரணையும் தனித்தனியே நடக்கும்.