வேலூரில் கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் உருவ பொம்மை எரிப்பு
வேலூர்: முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை காரணமாக வேலூரில் கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் உருவ பொம்மையை அனுமன் சேனா அமைப்பினர் எரித்தனர்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக தமிழக கேரள எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணைக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றது.
இந்த நிலையில் வேலூர் லாங்குபஜாரில் கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் உருவ பொம்மையை எரிக்கப் போவதாக அனுமன் சேனா அமைப்பினர் அறிவித்து இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போராட்ட இடத்தை மாற்றினர்.
ஆரணி ரோட்டில் உள்ள வேலூர் சி.எம்.சி. கண் மருத்துவமனை அருகில் உம்மன் சாண்டியின் உருவ பொம்மையை அனுமன் சேனா அமைப்பினர் மாநில செயலாளர் சிவசண்முகம் தலைமையில் தீ வைத்து கொளுத்தினர்.
இது பற்றி தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் சர்தார் மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டகாரர்களை கைது செய்ய முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர்.