சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி: ஜெயலலிதா ரூ.1 கோடி நிதி
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
தமிழக முதல்வர் ஜெயலலிதா 1995ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த போது விளையாட்டு வீரர்களின் நலன் கருதியும், சென்னையில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடும், பல்வேறு விளையாட்டுகளில் அவர்கள் சென்னையில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிக்கொணர வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலும் நவீன முறையிலான விளையாட்டு அரங்குகளை அமைத்துக் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் சென்னையில் கட்டப்பட்ட உலகத் தரம் வாய்ந்த டென்னிஸ் விளையாட்டு அரங்கில் 1997ம் ஆண்டு முதல் உலக அளவில் புகழ் பெற்ற வீரர்கள் பங்கு பெறும் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 2005ம் ஆண்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, முதன் முதலாக சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடத்திட ரூ.1 கோடி தமிழக அரசின் பங்களிப்பாக நிதியுதவி வழங்கி முன்னோடியாக விளங்கினார்.
கடந்த காலங்களைப் போன்றே இப்போட்டிகள் 2012ம் ஆண்டு ஜனவரி மாதம், தனியார் பங்களிப்புடன் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை சிறந்த முறையில் நடத்துவதற்கு ஏதுவாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக அரசின் நிதி உதவியாக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு டென்னிஸ் சங்க கவுரவ செயலாளர் சி.பி.என். ரெட்டியிடம் நேற்று(12ம் தேதி) வழங்கி, போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டுமென்ற தனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொண்டார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.