முல்லை பெரியாறு: தேனி மாவட்டத்தில் கடையடைப்பு-பள்ளிகள் மூடல்-உண்ணாவிரதம்

முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்து விட்டதாக கூறி வதந்தி பரப்பி வரும் கேரள மாநிலம், புதிய அணை கட்ட முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த பத்து தினங்களாக தமிழ்நாடு – கேரளா எல்லையோர மாவட்டங்களில் சாலைமறியல், கடையடைப்பு உள்ள போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் தமிழகம் கேரளா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கடையடைப்பு
இந்த நிலையில் தேனி மாவட்டம் முழுவதும் உள்ள வியாபாரிகள் இன்று ஒருநாள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில கிராமங்களில் விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் தேனி மாவட்டம் உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்காவது நாளாக முற்றுகை
இதனிடையே கேரளா எல்லைப் பகுதிக்கு செல்ல கிராம மக்கள் நான்காவது நாளாக திரண்டு வருவதால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications