குமரி அருகே கைதி தப்பி ஓட்டம் – பாதுகாக்க தவறிய 2 காவலர்கள் மீது நடவடிக்கை
ஆசாரிபள்ளம்: கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பி ஓடிவிட்டார். பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு போலீசார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குமரி மாவட்டம் பேச்சிபாறை அருகே உள்ள கடம்பமூடு பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ்குமார். இவரும் பக்கத்து வீட்டை சேர்ந்த காஜைமைதீனுக்கும் வீட்டு சுவர் பிரச்சனையில் மோதல் இருந்து வந்தது. சம்பவதன்று அவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. ஆத்திரமைடந்த காஜைமைதீன் பிரின்ஸ் குமாரை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் காயம் அடைந்தார்.
இதுபற்றி பிரின்ஸ் குமார் அளித்த புகாரின் பேரில் பேச்சிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 5ம் தேதி காஜைமைதீனை கைது செய்தனர். அப்போது அவர் தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதையடுத்து காஜாமைதினை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆண்கள் பொது வார்டில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிக்சை அளிக்கப்பட்டது. 2 போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டு கண்காணித்து வந்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் ஏட்டு சசிகுமார் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை காவலுக்கு நின்ற போலீசாரை ஏமாற்றி விட்டு காஜாமைதீன் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பினார். இதனால் காவலுக்கு நின்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதுபற்றி அவர்கள் ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து காஜைமைதீனை தேடி வருகிறார்கள். பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் 2 பேர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.