விடுதலைப்புலிகள் மீதான தடை: வழக்கை விரைந்து நடத்த ஐகோர்ட்டில் வைகோ கோரிக்கை
சென்னை: விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்கும் ரிட் மனு ஜனவரியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை விரைந்து நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வைகோ கோரிக்கை விடுத்ததற்கு தலைமை நீதிபதி இவ்வாறு பதிலளித்தார்.
விடுதலைப்புலிகளுக்கு இந்திய அரசு விதித்த தடையை நீக்க கோரி 2010 ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கொடுத்த ரிட் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. அதனை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி வெள்ளிக்கிழமையன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அமர்வில் வைகோ நேரில் ஆஜராகி வாதாடினார்.
அப்போது விடுதலைப் புலிகள் மீதான தடை உத்தரவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு நீட்டித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதியன்றும் இந்த உயர் நீதிமன்றத்தில் இதுபற்றி நான் குறிப்பிட்டேன்.
எனவே, எனது ரிட் மனு மீது விரைவில் விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். என்று வைகோ கூறினார். அவரது வாதத்திற்கு பின்னர் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், ரிட் மனு ஜனவரியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications