2ஜி வழக்கு: மூன்றாவது குற்றப்பத்திரிகை மீதான விசாரணை ஒத்திவைப்பு
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக டிசம்பர் 12ம் தேதி மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிகையில், எஸ்ஸார் புரோமோட்டர்,லூப் மற்றும் பிற நிறுவனங்களுக்கு தொடர்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதனை எதிர்த்து அந்த நிறுவனங்கள் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் .இதனை தொடர்ந்து இம்மனுவை விசாரித்த நீதிபதி விசாரணையை டிசம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சிபிஐ முன்பு தாக்கல் செய்த இரண்டு குற்றப்பத்திரிக்கையில் முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஏ.ராசா, அவரது செயலர் சந்தோலியா, முன்னாள் தொலை தொடர்புத்துறை செயலர் சித்தார்த் பெகுரா கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பலரது பெயர் இடம் பெற்றுள்ளது.
இதில் பலர் ஜாமீனில் வெளியில் சென்றுள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மற்றும் பெகுரா ஆகியோர் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.