திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 போலி டாக்டர்கள் கைது
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மருத்துவ சான்றிதழ் எதுவும் இன்றி வைத்தியம் பார்த்த 21 போலி டாக்டர்களை போலி கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு படித்தவர்கள் போலியாக டாக்டர் என்று கூறி கொண்டு ஆங்கில வைத்தியம் செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து போலீசார் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமையன்று போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது திருவண்ணாமலை நகருக்குள் இரண்டுபேர் போலி டாக்டர்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதேபோல் ஆரணியில் நான்குபேரும் கலசப்பாக்கத்தில் 5 பேரும், கீழ்பென்னாத்தூரில் 3 போலி டாக்டர்களையும் கண்டுபிடித்தனர். மேலும் கண்ணமங்கலம் சந்தவாசல், வெறையூர் பகுதியில் மருத்துவ சான்றிதல் இன்றி வேலை பார்த்தவர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 21 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர். கடந்த செப்டம்பர் மாதம் இதே போல் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் போலீசார் நடத்திய சோதனையில் 49 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.