மீண்டும் முதல்வராக ஷோபாவுடன் சேர்ந்து எதியூரப்பா யாகம்: ஜன. 15க்குப் பின் நல்லது நடக்குமாம்!
பெங்களூர்: ஊழல் புகாரில் சி்க்கி பதவி விலகிய கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா விட்ட பதவியை மீண்டும் பிடிக்க மின்துறை அமைச்சர் ஷோபாவுடன் இணைந்து யாகம் நடத்தி வருகிறார். வரும் ஜனவரி மாதம் 15ம் தேதிக்குப் பிறகு நல்லது நடக்கும் என்று நம்புகிறார்.
கர்நாடக முதல்வராக இருந்த எதியூரப்பா மீது ஊழல் புகார்கள் குவிந்தன. இதனால் அவருக்கு பலவகையில் நெருக்கடி ஏற்பட்டதையடுத்து அவர் பதவி விலகினார். இதையடுத்து பாஜக எதியூரப்பாவின் ஆதரவாளரான சதானந்த கௌடாவை முதல்வராக்கியது. இதற்கிடையே ஊழல் வழக்குகளில் கைதாகி சிறையில் இருந்த எதியூரப்பா தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். இந்நிலையில் மீண்டும் முதல்வராக விரும்பும் அவர் தனது விருப்பத்தை கட்சி மேலிடத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் அவர் விட்ட பதவியைப் பிடிக்க பன்ட்வல் பகுதியில் உள்ள நரஹரி மலையில் யாகம் நடத்தி வருகிறார். இந்த யாகம் கடந்த மாதம் 26ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்றைய யாகத்தில் எதியூரப்பா கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
உலக நன்மைக்காக இந்த யாகத்தை நடத்துகிறேன். இதில் கலந்துகொண்டதன் மூலம் எனக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று நம்புகிறேன். மேலிட உத்தரவால் பதவி விலகினேன். அவர்களே எனது எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள். வரும் ஜனவரி மாதம் 15ம் தேதிக்குப் பிறகு எனக்கு நல்லது நடக்கும் என்றார்.