கேரள செல்லும் லாரிகளில் சரக்கு புக்கிங்கை நிறுத்த ஏஜென்டுகள் முடிவு
இதுபற்றி தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜென்டுகள் சம்மேளன தலைவர் ராஜவடிவேல் கூறியதாவது, முல்லை பெரியாறு அணை பிரச்சனை காரணமாக தமிழகத்தில் இருந்து செல்லும் லாரிகள் கேரளாவில் தாக்கப்படுகின்றன. இதில் டிரைவர்களும், கிளினர்களும் தாக்கப்படுகின்றனர். இதனால் சரக்குகளை குறிப்பிட்ட இடத்துக்கு குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு செல்ல முடிவதில்லை.
சரக்குகள் தேங்குவதால் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் லாரியிலேயே அழுகி விடுகின்றன. சரக்குகளுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை.
இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் லாரிகளில் சரக்குகளை புக்கிங் செய்வதை நாளை காலை முதல் தமிழகம் முழுவதும் நிறுத்தப்படுகிறது. தமிழக-கேரள அரசு முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் சுமூக தீர்வு காணும் வரை புக்கிங் செய்வது நிறுத்தப்படும்.
இதனால் நாள்தோறும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்ல கூடிய சர்க்கரை, கல்மாவு, இரும்பு, மஞ்சள், மாட்டு இறைச்சி உள்ளிட்ட சுமார் ரூ.1500 கோடி வரையிலான அத்திவாசிய பொருட்கள் தேக்கம் அடையும். எனவே முல்லை பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக உரிய தீர்வு எடுக்க வேண்டும் என இரு மாநில அரசுகளையும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்