மூவர் உயிர் காக்க அலைபேசிக்கு 'தவறிய அழைப்பு' கொடுங்கள்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரின் உயிரைக் காக்க அலைபேசிக்கு தவறிய அழைப்பு (மிஸ்டு கால்) கொடுங்கள் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நமது தம்பிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என்பது தமிழர்களின் ஒட்டு மொத்த நியாய உணர்வாகும்.
அதோடு தூக்குத் தண்டனையை நிரந்தரமாக ஒழித்திட வேண்டும் என்பது நமது மனிதாபிமான கோரிக்கையாகும். இந்த உணர்வை ஒவ்வொரு தமிழரும் வெளிப்படுத்த 9282221212 என்ற அலைபேசி எண்ணிற்கு ஒரு தவறிய அழைப்பை (மிஸ்ட் கால்) கொடுக்குமாறு தமிழர்கள் அனைவரையும் நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.
இந்த அழைப்புகளின் எண்ணிக்கையை www.averzs.com என்ற இணையத் தளத்தில் காணலாம். நமது அன்பிற்கினிய மூன்று தம்பிகளின் உயிரைக் காக்க பல்வேறு வகைகளின் முயன்றுவரும் நாம், இந்த கடமையையும் தவறாமல் செய்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
இதுபோலவே, தமிழின உணர்வாய் வாழும் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் இயக்கி வெளியாகியுள்ள ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்தையும் தமிழர்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று திரையரங்கில் பார்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப் படத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள புனிதவதி என்கிற அந்தச் சிறுமியின் துயரமிக்க வாழ்வு, நமது சொந்தங்கள் ஈழ மண்ணில் இன்றளவும் அனுபவித்துவரும் துயரத்திற்கு ஒரு அத்தாட்சியாகும்.
உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் மற்றுமொரு படமலல, அது நம் தமிழர்களின் குருதி சிந்தும் வரலாற்றின் குறியீடு என்பதை உணர வேண்டும்," என்று கேட்டுக் கொண்டுள்ளார் சீமான்.