முல்லைப் பெரியாறு பிரச்சனை: ஈரோடு, கரூரில் ஒருநாள் கடையடைப்பு - ரூ.330 வர்த்தகம் பாதிப்பு
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக கேரள அரசை கண்டித்து நேற்று கரூர் மாவட்டத்தில் கடையடைப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட வர்த்தக மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தில் இணைந்து உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து கொண்டன.
இதனால் கரூர் பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளும், ஜவஹர் பஜார், கோவை சாலை, பழைய பைபாஸ் சாலை, மேற்கு பிரதட்சணம் சாலை, வடக்கு பிரதட்சணம் சாலை, திண்டுக்கல் சாலை, லைட்ஹவுஸ், வெங்கமேடு பகுதிகளில் உள்ள கடைகளும் பூட்டி கிடந்தன.
இந்த கடையடைப்பு குறித்து முன்பே அறிவிக்கப்பட்டதால், விவசாயிகள் யாரும் காய்கறிகள் கொண்டு வரவில்லை. இதனால் உழவர் சந்தை வெறிச்சோடி கிடந்ததது. மேலும் திரையரங்குகளில் காலை, பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.
500க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றதால் கரூரில் ஆட்டோக்கள் அதிகளவில் நேற்று இயங்கவில்லை. மேலும் பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்படவில்லை.
ஆங்காங்கே ஒரிரு கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன. பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்ததால், ஏற்றுமதி பணிகள் பாதிக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு பிரச்சனைக்காக நேற்று கரூரில் நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தால், சுமார் ரூ.80 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஆட்டோ மொபைல்ஸ், நகைக்கடைகள், விசைத்தறியாளர்கள், எண்ணெய் உற்பத்தியாளர்கள், மளிகை கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டோர் அடங்கிய 25 சங்கங்கள், வணிகம் மற்றும் சேவை சார்ந்த மொத்தம் 105 சங்கங்கள் பங்கேற்றது.
ஈரோட்டில் மருந்து கடைகளை தவிர பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் நிலையத்தில் கடைகள் அனைத்து பூட்டப்பட்டு இருந்ததால் வெளியூர் பயணிகள் பெரும் சிரமப்பட்டனர்.
ஆட்டோ உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால், ஈரோடு முழுவதும் சுமார் 2,000க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடவில்லை. 16க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நேற்று பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஈரோட்டில் நடைபெற்ற போராட்டத்தால் சுமார் ரூ.250 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.