லோக்பால் விவகாரத்தில் அன்னா அடம்பிடிக்கக் கூடாது: சிபிஐ
ஹைதராபாத்: லோக்பால் மசோதா விவகாரத்தில் அன்னா விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணை பொதுச் செயலாளர் சுரவரம் சுதாகர் ரெட்டி ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
லோக்பால் மசோதா குறித்து நாடாளுமன்றத்தின் முடிவுக்கே அன்னா விட்டுவிட வேண்டும். வலுவான லோக்பால் மசோதா வேண்டும் என்று இடதுசாரிகளும் விரும்புகிறோம். இது தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். அரசின் லோக்பால் மசோதாவில் சில குறைபாடுகள் இருக்கத் தான் செய்கிறது. அது குறித்து நாடாளுமன்றத்தி்ல் தான் விவாதித்து முடிவு எடுக்க முடியும்.
லோக்பால் வரம்பிற்குள் சிபிஐ-ஐ கொண்டு வர வேண்டும் என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தற்போது மத்திய அரசின் கைப்பாவையாக இருக்கும் சிபிஐ அமைப்பை தன்னாட்சி அமைப்பாக மாற்ற வேண்டும். சிபிஐ-ஐ லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வரக்கூடாது.
அன்னாவின் கோரிக்கைகளில் சிலவற்றை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சில விஷயங்களில் அவர் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். ஐனநாயகத்தில் நாடாளுமன்றம் உயர்வானது என்பதை அவர் புரிந்து செயல்பட வேண்டும் என்றார்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது,
லோக்பால் அமைப்புக்கென்று தனியாக விசாரணைப் பிரிவைத் துவங்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களின் முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரம் லோக்பால் அமைப்புக்கு வழங்க வேண்டும். இது குறித்து மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்றார்.