புயல், வெள்ளம்: பிலிப்பைன்ஸ் மக்களுக்கு சோகமான கிறிஸ்துமஸ்
இலிகன்: கடந்த 17 தேதி பிலிப்பைன்ஸ் நாட்டை ககடும் புயல் தாக்கி ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை சோகமயமானது.
கடந்த 17ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டை வாஷி என்ற புயல் தாக்கியது. இதில் பிலிப்பின்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள மிண்டானா தீவு கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த தீவில் உள்ள ககயான் டி ஓரா, இலிகன் உள்ளிட்ட துறைமுகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இதுவரை 1,236 பேர் பலியாகி உள்ளதாகவும், 1000க்கும் மேற்பட்டோரை காணவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி வீடுகளை இழந்த சுமார் 69,000 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் பழைய இடங்களுக்கு திரும்ப குறைந்தது 6 மாதங்கள் ஆகும் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். முகாம்களில் உள்ள பலரின் குடும்பத்தார் ள்ளத்தில் இறந்ததால், பழைய இடங்களுக்கு திரும்ப மக்களுக்கு விருப்பம் இல்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவு வழங்கப்பட்டு. முகாம்களில் உள்ள மக்கள் நீண்ட வரிசையில் நின்று உணவைப் பெற்றனர்.
இந்நிலையில் டிக்கிலான் என்ற கிராமத்தில் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து 422 பேர் உயிர் தப்பினர். இது குறித்து உயிர்ப்பிழைத்தவர்களில் ஒருவரும், டிக்கிலான் கிராம தலைவருமான அரிலியோ மகாரோ கூறியதாவது,
எங்களுக்கு இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிக்கை சோகமானது. ஆனால் இந்த நிலையில் இருந்து நாங்கள் மீண்டு வருவோம் என்று நம்புகிறேன். எங்களின் வீடுகள், சொத்துகள், பணம் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த நிலையில் நாங்கள் எப்படி கிறிஸ்துமஸ் கொண்டாட முடியும் என்றார்.