சசிகலா மீதான விசுவாசத்தால் பதவியை இழந்த கோவை துணை மேயர் சின்னதுரை
தொட்டதெல்லாம் சனி என்ற நிலைக்கு ஆளாகியுள்ளனர் சசிகலா ஆதரவாளர்கள். சசிகலா மீதான விசுவாசத்தாலும், சசிகலா குடும்பத்தினருக்குக் காட்டி வந்த ஆதரவாலும் இப்போது அவர்களை சனியன் பிடித்து ஆட்டத் தொடங்கியுள்ளது. பலரும் பதவிகளையும், பொறுப்புகளையும் பறி கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் சின்னதுரை. கோவை மாநகராட்சியின் 76வது வார்டு உறுப்பினரான இவர் துணை மேயராகவும் இருந்து வந்தார். 63 வயதான இவர் நீண்ட காலமாக அதிமுகவில் இருந்து வருபவர். ஜெயலலிதாவின் விசுவாசியாக திகழ்ந்து வந்த இவர் நாளடைவில் சசிகலாவுக்கு ஆதரவாளராக மாறினார். குறிப்பாக சசிகலாவின் உறவினரான ராவணனுக்கு வேண்டப்பட்டவராக மாறிக் கொண்டார்.
துணை மேயர் பதவிக்கு ராவணனின் முழு ஆதரவுடன் இவரது பெயர் அறிவிக்கபப்ட்டது. ஆனால் ஏற்கனவே பல புகார்களை சுமந்து நிற்கும் சின்னத்துரையை துணை மேயராக்குவதா என்று கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் ராவணன், சின்னத்துரைக்கு முழு ஆதரவு தெரிவித்து இவர்தான் துணை மேயர் என்று கண்டிஷனாக கூறி விட்டதாக தெரிகிறது.
இதையடுத்து சின்னத்துரையே துணை மேயரானார். ஆனாலும் கட்சிக்குள் புகைச்சல் இருந்து வந்தது. தற்போது சசிகலா குடும்பமே கூண்டோடு தூக்கப்பட்டு விட்டதால் கோவை அதிமுகவினர் பெரும் உற்சாகமடைந்தனர். சின்னத்துரைக்கு நாள்குறிக்க ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் சென்னையில் சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தின்போது சின்னத்துரையைக் கூப்பிட்டு ராஜினாமா கடிதம் கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவரும் தனது ராஜினாமாவை, சசிகலாவின் தீவிர எதிர்ப்பாளர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலையில், கோவை மேயர் வேலுச்சாமியிடம் ஒப்படைத்தார். அவரும் உடனடியாக மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பி வைத்தார். அவர் மாநில தேர்தல் ஆணையத்திற்கு
அனுப்பி உடனடியாக ராஜினாமா ஏற்கப்பட்டது.
ஆனால் தான் மட்டுமே ராவணனுடன் நெருக்கமாக இருந்தது போல கூறுகிறார்கள். உண்மையில் மேலும் பலருக்கும் ராவணனுடன் நல்ல நெருக்கம் இப்போதும் கூட உள்ளது. கட்சித் தலைமை என்னை அழைத்து விசாரித்தால் அவர்களை நான் போட்டுக் கொடுப்பேன் என்று கூறியுள்ளார் சின்னத்துரை.