தூத்துக்குடியில் மேலும் ஒரு டாக்டருக்கு கொலை மிரட்டல்-போலீஸ் விசாரணை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அரசு டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்து மருத்துவ கல்லூரிக்கு மொட்டை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
டாக்டர்களின் போராட்டத்தை திசை திருப்புவதற்காக இந்த கடிதம் அனுப்பப்பட்டதா, என்பது குறிதது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி பிரையன்ட் நகரை சேர்ந்தவர் சரவணன். இவர் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக உள்ளார். மேலும் பிரையன்ட் நகரில் தனியாக கிளினிக் வைத்தும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி டீன் கிருஷ்ணனுக்கு ஒரு மொட்டை கடிதம் வந்தது. இதில் நிலம் வாங்கியது தொடர்பாக டாக்டர் சரவணனுக்கு கொடுக்கல், வாங்கல் பிரச்சனை உள்ளது. அதனை அவர் உடனே தீர்க்க வேண்டும். இல்லையென்றால் அவரை கொலை செய்து விடுவோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் இதுகுறித்து சரவணனுக்கு தகவல் தெரிவித்தனர். அவரது தரப்பில் மாவட்ட எஸ்பி ராஜேந்திரனிடம் புகார் தெரிவித்துள்ளனர். மருத்துவ சிகிச்சை அளிப்பது தொடர்பாக பிரச்சனைக்காக இந்த மிரட்டல் கடிதம் வரவில்லை என்பதால் டாக்டர் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் மிரட்டல் கடிதம் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் இதனை அலட்சியமாக விட்டு விடாமல் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடிதம் எங்கிருந்து வந்தது, இதனை அனுப்பியவர்கள் யார், எதற்காக அனுப்பினார்கள், டாக்டர் சரவணனுக்கு எதிரிகள் யாராவது இருக்கிறார்களா, டாக்டர்கள் போராட்டத்தை திசை திருப்புவதற்காக கடிதம் அனுப்பி உள்ளார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.