பகல் முழுவதும் கொளுத்தும் வெயில், அதிகாலையில் 'ஜில்'லென பனி: அசத்தும் சென்னை சீசன்!
சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழை பலகட்டமாக பெய்து ஒரு வழியாக ஓய்ந்துள்ள நிலையில் அதிகாலை மூடுபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் விடிந்து பல மணிநேரங்கள் வரை புகை மூட்டம் போல பனி பரவியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு சென்னை நகரிலும், புறநகர் பகுதிகளிலும் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் சராசரி அதிகபட்ச வெப்ப நிலை 31.5 டிகிரியாக இருந்துள்ளது. கடந்த ஆண்டு 31.1 டிகிரியாக இருந்தது. இப்போது 30.5 டிகிரியாக குறைந்துள்ளது. பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குளிர் அதிகமாக இருக்கிறது. இதுபோல் வெயிலும் திடீரென்று அதிகமாக அடிக்கிறது. இதனால் வெயில் அளவும் வழக்கமாக இந்த காலத்தில் இருப்பதை விட அதிகமாக உள்ளது.
மழை அளவு அதிகம்
வடகிழக்கு பருவ மழை வழக்கமாக டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்து விடும். இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தான் “தானே” புயல் வந்து தமிழ்நாட்டையும், புதுச்சேரியையும் தாக்கியது. அதன்பிறகும் தமிழ்நாட்டில்ஆங்காங்கு மழை பெய்தது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வானிமை மைய அதிகாரி, இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை இன்னும் முடியவில்லை நீடிக்கிறது. இன்னும் தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பருவ மழை நின்றால் அதுபற்றிய அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படும் என்றார்.