உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கேரளாவின் வஞ்சம் குறையவில்லையே-வைகோ ஆவேசம்
திருப்பூர்: முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் சட்டபூர்வ உரிமை குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் கேரளத்தின் வஞ்சம் குறையவில்லை. அணையைப் பராமரிக்க மட்டுமல்ல, உடைக்கவும் எங்களுக்கு அனுமதி உள்ளது என்று கேரளம் சட்டம் நிறைவேற்றுகிறது. இதை மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் கண்டிக்கவில்லை என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
திருப்பூரில் தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு வைகோ பேசுகையில்,
தேர்தல் அரசியல் மட்டுமே நம் தேவையாக இருக்கக் கூடாது. பதவிகளைத் தாண்டிய அரசியல் பார்வை வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பதவி பெரிது என்று இருந்ததில்லை.
மதிமுகவைப் பொறுத்த வரை பதவிகளே தேவையில்லை என தியாகம் செய்தவர்கள் அல்ல. எனினும், சுயமரியாதைக்கும் தன்மானத்துக்கும் இழுக்கு என்றால் பதவியை தூக்கியெறிந்து வரும் இயக்கமாக மதிமுக இருக்கும். பேரவை, மக்களவை நாற்காலிகளை நினைத்து மதிமுக இயங்கவில்லை. காலம் இடும் கட்டளைகளை மதிமுக செய்கிறது.
தானே புயலால் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் நொறுங்கிக் கிடக்கின்றன. லட்சக்கணக்கான குடும்பங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. அழிவின் பிடியில் சிக்கியுள்ளவர்களுக்கு 5 ஆண்டுகளாவது அத்தியாவசியப் பண்டங்களை அரசு அளிக்க வேண்டும். அவர்களது கடன்களை ரத்து செய்ய வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் சட்டபூர்வ உரிமை குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் கேரளத்தின் வஞ்சம் குறையவில்லை. அணையைப் பராமரிக்க மட்டுமல்ல, உடைக்கவும் எங்களுக்கு அனுமதி உள்ளது என்று கேரளம் சட்டம் நிறைவேற்றுகிறது. இதை மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் கண்டிக்கவில்லை.
ஊழல் அரசியலை ஒழிக்க மாற்று அரசியல் அணி வேண்டும் என்ற கருத்து இங்கு முன்வைக்கப்பட்டுள்ளது. மாற்றம் என்பது சொல்லிக்கொண்டு வராது. ஆனால் நிச்சயம் மாற்றம் வரும். தமிழக மக்களே ஊழல் அரசியலை தூக்கியெறியும் காலம் வரும்.
இலங்கைத் தமிழர் பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை, மீனவர்கள் மீதான தாக்குதல் என தமிழர்களின் ஒவ்வொரு பிரச்னையிலும் மத்திய அரசு வஞ்சகம் இழைத்து வருகிறது. இந்தத் துரோகம் தொடருமானால், இந்திய ஒருமைப்பாடும் பாதிக்கப்படும்.
ஊழலற்ற சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து புதிய அணியை உருவாக்க வேண்டும் என்று இங்கு காந்திய மக்கள் இயக்கத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பதவிக்கு ஆசைப்பட்டோ அல்லது அப்படிப்பட்ட அற்ப ஆசைகளுக்காகவோ நான் வரவில்லை. ஊழலற்ற அரசியல் கண்டிப்பாக அமையும். அதை மக்கள் முன்னெடுப்பார்கள் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications