மும்பை மாநகராட்சித் தேர்தல்: இழுபறிக்குப் பிறகு பவாருடன் சேர்ந்த காங்கிரஸ்
மும்பை: அடுத்த மாதம் நடக்கவிருக்கும் மும்பை மாநகராட்சித் தேர்தலில் மத்திய அமைச்சர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது.
மும்பையில் மாநகராட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கிறது. அதில் கூட்டணி பற்றி ஒரு முடிவுக்கு வருமாறு மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார் காங்கிரஸுக்கு கெடு விதித்திருந்தார். இதையடுத்து அவரது கட்சியுடன் கூட்டணி வைக்க பேரார்வமாக இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்தது.
இந்நிலையில் நேற்று கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கவும், தொகுதிப் பங்கீடு செய்யவும் இரு கட்சி தலைவர்களும் மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவான் வீட்டில் சந்தித்து பேசினர். கடந்த 15 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சி சிவசேனா-பாஜக கையில் இருப்பதால் காங்கிரஸால் தனித்துப் போட்டியிட்டு வெல்ல முடியாது என்று சவான் நினைத்தார்.
அதனால் எப்படியாவது பவாருடன் கூட்டணி வைப்பது என்று காங்கிரஸ் முடிவு செய்தது. இதையடுத்து நேற்றைய பேச்சுவராத்தையின்போது பவார் 65 சீட் கேட்க காங்கிரஸ் 45 முதல் 50 தான் கொடுப்போம் என்று கூறியது. இதனால் பேச்சுவார்த்தை நெடுநேரம் நீடித்தது. இறுதியில் 58 சீட்கள் தர காங்கிரஸ் ஒப்புக் கொண்டதையடுத்து பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தது.
இது குறித்து சவான் கூறியதாவது,
இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்தது. சிவசேனா-பாஜகவின் ஆட்சிக்கு முடிவு கட்ட இரு கட்சிகளின் தலைவர்களும் தீர்மானித்துள்ளனர். சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டுங்கள் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊழலால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர் என்றார்.