ஸ்காட்ச், ஒயின், விஸ்கி, ரம், ஜின்.. இனி டாஸ்மாக் நிறுவனமே இறக்குமதி செய்து ஹோட்டல்களுக்கு விற்கும்
மேலும் 'எலைட்' என்ற பெயரில் தொடங்கப்பட இருந்த சிறப்பு டாஸ்மாக் கடைகளின் பெயர் 'ஸ்பெஷல்' டாஸ்மாக் கடைகள் என மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில அரசு நிறுவனமான வாணிப கழகம் (டாஸ்மாக்) நிறுவனம் சார்பில் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த நிறுவனமே மாநிலம் முழுவதும் 6,696 டாஸ்மாக் மதுக் கடைகளையும் நடத்தி வருகிறது.
வெளிநாட்டு மதுபானங்கள் என்ற பெயரில் போலி மது வகைகளும் விற்பனை செய்யப்படுவதால் வெளிநாட்டில் இருந்து டாஸ்மாக் நிறுவனமே மதுபானங்களை இறக்குமதி செய்து விற்க திட்டமிட்டுள்ளது.
இதன்படி வெளிநாடுகளில் இருந்து 300 வகையான மதுபானங்களை டாஸ்மாக் இறக்குமதி செய்யவுள்ளது. இதில் ஸ்காட்ச், ஒயின், பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் போன்றவையும் அடங்கும்.
இதை தற்போதுள்ள டாஸ்மாக் கடைகளில் விற்காமல் இதற்காக பிரத்யேக கடைகள் திறக்கப்படவுள்ளன. முதலில் 'எலைட்' என்ற பெயரில் இந்த மதுக்கடைகள் தொடங்கப்படுவதாக இருந்தது.
ஆனால், இப்போது அதை 'ஸ்பெஷல்' டாஸ்மாக் என பெயர் மாற்றம் செய்துள்ளது தமிழக அரசு.
முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் 45 இடங்களில் இந்த ஸ்பெஷல் கடைகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதலில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்தில் மட்டும் 'ஸ்பெஷல்' கடைகள் தொடங்கப்படும். ஸ்பெஷல் டாஸ்மாக் கடைகளுக்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கடைகளும் தயாராகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு மதுபானக் கடைகளை திறக்க கூடாது என கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பை தமிழக அரசு எதிர்நோக்கியுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள அனைத்து பப்கள், கிளப்கள், பார்கள், ஹோட்டகளுக்குத் தேவையான வெளிநாட்டு மதுபானத்தை டாஸ்மாக் மூலமே வாங்க வேண்டும் என்றும் தமிழக அரசு புதிய உத்தரவைப் பிறப்பிக்க முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் மாநில அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 500 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் வெளிநாட்டு மதுபான பிராண்டுகளில் ஜானி வாக்கர் பிளாக் லேபிள், சிவாஸ் ரீகல், அப்சலுட் வோட்கா, கிளேன்பிட்ஜ், ரெமி மார்ட்டின், ஹென்னஸி ஆகியவை முக்கியமானவையாகும். இவை இப்போது ஏஜென்டுகள் மூலம் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றை டாஸ்மாக்கே இறக்குமதி செய்து வழங்கலாம் என அரசுக்கு மூத்த அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
இது தொடர்பான உத்தரவு விரைவில் வெளியாகலாம்.