பலாத்கார வழக்குகளில் விரல் சோதனையை தடை செய்ய பரிந்துரை!
டெல்லி: பாலியல் பலாத்கார வழக்குகளில் பலாத்காரத்திற்கு உள்ளாகும் பெண்களிடம் விரல் சோதனை நடத்துவதற்குத் தடை விதிக்கலாம் என்று மத்திய அரசுக்கு உயர் மட்டக் குழு பரிந்துரைத்துள்ளது.
பாலியல் பலாத்கார வழக்குகளின் நடைமுறைகள் தொடர்பாக ஆய்வு செய்ய சமூக நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டகுழு இப்பரிந்துரையை அளித்துள்ளது.
தற்போது பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகும் பெண்களிடம் அரசு மருத்துவர்களைக் கொண்டு விரல் சோதனை நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த நடைமுறை மிகவும் அநாகரீகமாக இருப்பதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதால் இதைத் தடை செய்ய வேண்டும் என்று இக்குழு பரிந்துரைத்துள்ளது.
இதேபோல் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகும் சிறார்கள் காவல்துறையிடம் ஒருமுறை, நீதிமன்றத்தில் ஒருமுறை என பல இடங்களில் வாக்குமூலம் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு நேர்ந்த கொடுமையை சிறார்களால் சரியாக விளக்கத் தெரியாது என்பதால் குழந்தைகளுக்கான உளவியல் நிபுணர்கள் அல்லது மருத்துவர்களை சிறார்கள் சார்பில் விளக்க அனுமதிக்க வேண்டும் என்பதும் மற்றொரு பரிந்துரை.
தேசிய குடும்ப நலத்துறையின் ஆய்வின் படி 15 வயது முதல் 49 வரையிலான பெண்களே பெரும்பாலும் பாலியல் வன்முறைக்குள்ளாவதாகவும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேபோல் பாலியல் வன்முறை வழக்குகளில் தண்டிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாகவும் சமூக நலத்துறை அமைச்சக குழு வெளிப்படுத்தியுள்ளது.
2010-ம் ஆண்டில் 22,171 பாலியல் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்த போதும் இதில் 27 சதவீத அளவுக்கே குற்றவாளிகள் தண்டிக்காட்டுள்ளனர். பாலியல் ரீதியான துன்புறுத்தல் சம்பவங்கள் 40,613 நிகழ்ந்த போதும் 30 விழுக்காடு குற்றவாளிகளே தண்டிக்கப்பட்டுள்ளனர் என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.