மகாத்மா காந்தி நினைவு தினம்: நாடு முழுவதும் அஞ்சலி
டெல்லி: மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் மரணம் நிகழ்ந்த முற்பகல் 11 மணியளவில் நாடு முழுவதும் மக்கள் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
சென்னையிலும் தமிழக சட்டசபையில் இரண்டு நிமிடம் மெளனம் அனுஷ்டிக்கப்பட்டது. ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் 64வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தேமுதிக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்த் காந்தியின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது தேமுதிக மாநில வர்த்தக அணி செயலாளர் ராமகிருஷ்ணன், தென் சென்னை மாவட்ட கழக செயலாளர் வி.என். ராஜன், மத்திய சென்னை மாவட்ட கழக செயலாளர் க. செந்தாமரைக் கண்ணன், வடசென்னை மாவட்ட கழக செயலாளர் வி. யுவராஜ் உள்ளிட்டோர் அவருடன் இருந்தனர்.
இதேபோன்று காந்தியின் நினைவு தினத்தையொட்டி புதுவை பீச் ரோட்டில் உள்ள அவரது சிலைக்கு அம்மாநில முதல்வர் ரங்கசாமி இன்று காலை 11 மணி்கு மாலை அணிவித்து, 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார். முன்னதாக புதுவை முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான வைத்திலிங்கம், மற்றும் புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.