'சிசேரியன்' என்றதும் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கர்ப்பிணி
நெல்லை: நெல்லையில் அறுவை சிகிச்சை மூலம் தான் குழந்தையை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதால் நிறைமாத கர்ப்பிணி மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்தார்.
நெல்லை தாழையூத்து பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மனைவி நிறைமாத கர்ப்பமாக உள்ளார். உறவினர்கள் அந்த பெண்ணை நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு விரைவில் பிரசவமாகிவிடும் என்று தெரிவித்தார்.
ஆனால் சுக பிரசவம் நடக்க வாய்ப்பில்லை என்றும், அறுவை சிகிச்சை செய்து தான் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர் மேலும் தெரிவித்தார்.
அறுவை சிகிச்சை என்ற வார்த்தையைக் கேட்ட அந்த கர்ப்பிணி பயந்து போனார். கழிவறைக்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றவர் மாயமாகிவிட்டார். மருத்துவமனை முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.
அவரைக் காணாமல் பதறிய உறவினர்கள் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த பெண் தனது அண்ணன் வீட்டில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
அவரிடம் கேட்டதற்கு, மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதால் பயந்துபோய் அண்ணன் வீட்டுக்கு ஓடிவந்துவிட்டதாகக் கூறினார். கத்திரிக்குப் பயந்து அண்ணன் வீட்டுக்கு ஓடிப் போய் விட்ட அந்தத் தங்கையை பின்னர் உறவினர்கள் சமாதானம் செய்து அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.