நானாவதி கமிஷன் முன்பு மோடியை ஆஜராகக் கோரும் மனு: குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி
அகமதாபாத்: கோத்ரா கலவரம் தொடர்பாக நானாவதி கமிஷன் முன்பு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆஜராகக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை அம்மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மனு விவரம்
2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் குஜராத்தில் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி நானாவதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டோர் சார்பாக ஜன் சங்கர்ஸ் மஞ்ச் என்ற தன்னார்வ அமைப்பு முதல்வர் நரேந்திர மோடியையும் விசாரிக்க வேண்டும் என்று நானாவதி கமிஷனிடம் முதலில் மனு கொடுத்தது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து மோடியை விசாரிகக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
தீர்ப்பு என்ன?
இம்மனு நீதிபதிகள் அகில் குரேஷி, சோனியா கோகனி ஆகியோர் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. இன்று விசாரணையின் முடிவில் மோடியை ஆஜராகக் கோரும் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் யாரை விசாரிக்க அழைக்க வேண்டும் அல்லது வேண்டாம் என்பதை நானாவதி கமிஷனே முடிவு செய்யும் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குஜராத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை பாரதீய ஜனதா கட்சி வரவேற்றுள்ளது.
மேல்முறையீடு
இதனிடையே மோடியை விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப் போவதாக ஜன் சங்கர்ஸ் மஞ்ச் அமைப்பின் வழக்கறிஞர் முகுல் சின்ஹா தெரிவித்துள்ளார்.
குஜராத் கலவரத்துக்கு நரேந்திர மோடிதான் காரணம் என்பது இந்த அமைப்பின் குற்றச்சாட்டு. நானாவதி கமிஷன் விசாரணையின் போது ஜன் சங்கர்ஸ் மஞ்ச் அமைப்பு 60க்கும் மேற்பட்டோரிடம் குறுக்கு விசாரணை நடத்தியுள்ளது.
குஜராத் கலவரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணைக் குழு கடந்த 2010ம் ஆண்டு மோடியிடம் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.