திருவள்ளுவர் சிலைக்கு தினமும் படகுவிடக் கோரி திமுக ஆர்ப்பாட்டம்: ஹெலன் டேவிட்சன் எம்.பி. பங்கேற்பு
குமரி: கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு தினமும் படகு விடக்கோரி கடற்கரையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன், ஹெலன் டேவிட்சன் எம்.பி. உட்பட நூற்றுக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரியில் கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் பாறை அருகே உள்ள பாறையில் கடந்த 2000ம் ஆண்டில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. பூம்புகார் போக்குவரத்துக் கழகம் சார்பில் இங்கு படகு சேவை நடைபெறுகிறது. இதற்காக சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து ஒரு நபருக்கு ரூ. 20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் ரூ.15 விவேகானந்தர் பாறைக்கும், ரூ.5 திருவள்ளுவர் சிலைக்கும் செல்வதற்காக வசூலிக்கப்படுகிறது.
ஆனால் கடலில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து பல நேரங்களில் திருவள்ளுவர் சிலைக்கு படகு செல்வதில்லை. கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக திருவள்ளுவர் சிலைக்கு படகு செல்லவில்லை என திமுக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட சிலை என்பதால் அதிமுக அரசு அதை புறக்கணிப்பதாக குமரி மாவட்ட திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் திருவள்ளுவர் சிலைக்கு தினமும் படகு விடக்கோரி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன், ஹெலன் டேவிட்சன் எம்.பி. உட்பட நூற்றுக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர்.