தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்
கோவை: தமிழகத்தில் லோக்ஆய்கதா சட்டம் இயற்றி அதை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு நடந்தது. அதில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. முதலில் இலங்கைக்கு ஆயுதமும், விமானங்களும் வழங்கி அங்குள்ள தமிழர்கள் கொல்லப்படுவதற்கு துணை நின்ற மத்திய அரசு தற்போது இலங்கைக்கு பணமும், ஆயுதங்களும் வழங்கி வருவது கண்டனத்திற்குரியது.
இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருவதையும் மத்திய அரசு தடுக்காமல் பாராமுகமாகத் தான் உள்ளது. முல்லைப் பெரியாறு அணை, காவிரி நீர்ப் பிரச்சனைகள் குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்சனை உள்ளது. இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படுமா, இல்லையா என்பதை மத்திய அரசும், அந்த திட்டத்திற்கு ஆதரவளிக்கிறதா, எதிர்க்கிறதா என்பதை மாநில அரசும் அறிவிக்க வேண்டும்.
அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஊழலுக்கு எதிரான லஞ்ச ஒழிப்பு மக்கள் நீதிமன்றம் அமைக்க லோக் ஆயுக்தா சட்டம் பல மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. அந்த சட்டத்தை தமிழகத்திலும் உடனடியாக அமல்படுத்த வேண்டும். திமுக ஆட்சிக் காலத்தைவிட தற்போது தான் மின்வெட்டு அதிகமாக உள்ளது. இந்த பிரச்சனையைத் தீர்க்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு வரும் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை ராஜபாளையத்தில் நடைபெறுகிறது. மேலும் கட்சியின் மாநில மாநாடு வரும் மார்ச் மாதம் 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் பாட்னாவில் நடைபெறுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications