சட்டப்பேரவைக்கே வராமலேயே விமர்சிப்பதா?: கருணாநிதி மீது ஜெயலலிதா தாக்கு- திமுக வெளிநடப்பு

கனி இருப்ப...
பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மனத்தின் மீது நடந்த விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நேற்று வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நடந்த விவாதத்தில் 37 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் தேவை, நாட்டின் வளர்ச்சி, அரசு எவ்வாறு நடந்து வருகிறது என்பனவற்றை கவனத்துக்கு கொண்டு வரும் வகையில் பேசினார்கள்.
பெரும்பாலான உறுப்பினர்கள் பாராட்டிப் பேசினார்கள். சிலர் நல்ல ஆலோசனை கூறினார்கள். சிலர் குறைகளை எடுத்து கூறினார்கள். சில பெரிய மனிதர்கள், இந்த அவைக்கு வராமலேயே வெளியே இருந்து விமர்சனம் செய்தனர்.
சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாக முரட்டுச் சொற்களைப் பயன்படுத்தினார்கள். கனி இருப்ப காய்கவர்ந்தற்று என்று வள்ளுவர் கூறியுளளார். பழம் இருக்கும் போது காய்களை உண்பவர்களும் உண்டு. வாதத்துக்கு வாதம் கருத்துக்கு கருத்து புள்ளி விவரத்துக்கு புள்ளி விவரம். சொல்லுக்கு சொல் என்று வாதம் அமைய வேண்டும்.
ஆனால் சிலர் உள்நோக்கத்துடன் பேசுவது வேதனை அளிக்கிறது. மக்களுக்கு நல்லதை செய்பவர்கள் யார்? மக்கள் அரசு எது? ஆட்சி செய்ய தகுதியான கட்சி எது? யார் நன்மை செய்வார்கள்? என்று மக்கள் பலமுறை சிந்தித்து வாக்களித்து எங்களை ஆட்சியில் அமர வைத்துள்ளனர்.
முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் மக்கள் நலன் கவனிக்கப்படவில்லை. சட்டம்-ஒழுங்கு சீரழிந்தது. மின்வெட்டு, விலைவாசி உயர்வு, கிரானைட் கொள்ளை, மணல் கொள்ளை, ரேசன் அரிசி கடத்தல், நில அபகரிப்பு போன்று பல்வேறு பிரச்சினைகள் இருந்தன.
ஒரு குடும்பத்தைத் தவிர வேறு யாரும் எந்த தொழிலும் செய்ய முடியாத நிலை இருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தனிநபர் வருமானத்தை பெருக்கவும், தமிழகத்தை சிறப்பாக முன்னேற்றவும் நடவடிக்கை எடுப்போம் என்று எனது தலைமையை நம்பி, மக்கள் வாக்களித்தனர். மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
தனிநபர் சமுதாய மேம்பாடு போன்றவற்றில் அக்கறை காட்டி வருகிறோம். ஆனால் வாக்களித்த மக்களை சிலர் நிந்தித்து வருகிறார்கள். சட்டசபைக்கு வந்து கருத்து சொல்ல வாய்ப்பு இருந்தும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லி, இன்னும் சிறப்பாக செயல்பட ஆலோசனைகளை சொல்ல வாய்ப்பு இருந்தும் சட்டசபைக்கு வராத மூத்த தலைவர், தோல்வி எங்களுக்கு அல்ல, உங்களுக்கு, தோற்றது நீங்கள் தான் என்று மக்களை குறை கூறி வருகிறார். இது சட்டமன்றத்தையும், ஜனநாயகத்தையும் கொச்சைப்படுத்தும் பேச்சு என்றார்.
திமுகவினர் எதிர்ப்பு
ஜெயலலிதாவின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து துரைமுருகன் எழுந்து நின்றார்.
துரைமுருகன்: இங்கு ஒரு விளக்கம் அளிக்க வாய்ப்பு தர வேண்டும்.
பேரவைத் தலைவர்:- முதல்வர் பேசும்போது குறுக்கீட்டு பேசக் கூடாது. அவர் பேசிய பிறகு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். (உடனே தி.மு.க.வினர் துரைமுருகனுக்கு ஆதரவாக அவருக்கு பேச வாய்ப்பளிக்கும்படி குரல் கொடுத்தனர்)
அ.தி.மு.க. உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேரவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.
பேரவைத் தலைவர், தி.மு.க. வினரை உட்காரும்படி எச்சரிக்கை செய்தார். என்றாலும் தி.மு.க.வினர் உட்காரவில்லை. அவர்களுக்கு எதிராக அ.தி. மு.க.வினரும் எழுந்து குரல் எழுப்பினார்கள்)
இதையடுத்து பேச அனுமதி தராததால் துரைமுருகன் வெளிநடப்பு செய்தார். அவரைத் தொடர்ந்து சில தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் வெளியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருந்த பகுதி நோக்கி ஒரு புத்தகம் வந்து விழுந்தது. உடனே அங்கு நின்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புத்தகத்தை காட்டி ஏதோ கூறினார்கள். இதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் கூச்சல் ஏற்பட்டது.
எனவே நின்று கொண்டிருந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றும்படி காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். உடனே தி.மு.க.வினர் வெளியேற்றப்பட்டனர். பிறகு சபாநாயகர் கூறுகையில், தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யவேண்டும் என்று திட்டமிட்டே வந்துள்ளனர். முதல்வர் யாரையும் பெயரை குறிப்பிட்டு பேசவில்லை. ஆனால் அவர்கள் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று குழப்பத்தை ஏற்படுத்தி விட்டனர்' என்றார்.
பேரவையில் இருந்து வெளியே வந்த பின் துரைமுருகன் கூறியதாவது:
தி.மு.க. உறுப்பினர்களை பேரவையில் இருந்து ஜனநாயகத்திற்கு எதிரான முறையில் வெளியேற்றி இருக்கிறார்கள். முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, மக்கள் பிரச்சினைகளை சட்டசபையில் பேசாமல் மூத்த தலைவர் ஒருவர் வெளியில் இருந்து பேசுகிறார் என்று குறிப்பிட்டார். நான் எழுந்து கடந்த ஆட்சியின்போது, அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த இன்றைய முதல்வர் ஜெயலலிதா எத்தனை முறை பேரவைக்கு வந்து பேசினார் என்று கேட்பதற்காக எழுந்தேன்.
ஆனால் பேரவைத் தலைவர் எனக்கும், எங்கள் கட்சியை சார்ந்த யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. எங்கள் மீது அ.தி.மு.க.வினர் புத்தகத்தை வீசி எறிந்தனர். விஜயகாந்த் கடினமான வார்த்தையால் பேசினார் என்று நடவடிக்கை எடுத்தார்கள். புத்தகத்தை வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்க விரும்புகிறேன். சட்டசபையில் எதிர்க்கட்சிகளுக்கு பாதுகாப்பு இல்லை, என்றார்.












Click it and Unblock the Notifications