கவுரவப் பிரச்சினையாக மாறிய சங்கரன்கோவில் இடைத் தேர்தல்:முழு வீச்சில் களத்தில் குதித்தது அதிமுக!
இந்த இடைத்தேர்தல் வெற்றியை மிகப் பெரிய கெளரவப் பிரச்சினையாக அதிமுக கருதுவதால் படு ஸ்பீடாக வேலைகளில் குதித்துள்ளனராம் ரத்தத்தின் ரத்தங்கள்.
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான கருப்பசாமியின் மறைவை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதியை ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை இருப்பினும் முதல் ஆளாக அதிமுக களத்தில் இறங்கியுள்ளது. வேட்பாளராக முத்துச்செல்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இடைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி வாகை சூடுவோம் என கடந்த சில தினங்களுக்கு முன் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். தேமுதிகவுக்கு திரணி இருந்தால் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா எனவும் அவர் ஓபன் சவால் விட்டுள்ளார்.
இந்த சவாலை அடுத்து சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் வெற்றியை கவுரவ பிரச்சனையாக கருதி அதிமுகவினர் இப்போதே தேர்தல் வேலையை தொடங்கி விட்டனர். கிராமப்புறங்களில் இப்போதே மறைமுக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சீறிப் பாயும் இலவசங்கள்
சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை தொகுதி முழுவதும் இடைத்தேர்தல் அறிவிக்கும் முன்பாக வழங்கிட வருவாய் துறை அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுளளனர். குறிப்பாக இலவசத் திட்டங்களை முழு வீச்சில் தொகுதிக்குள் இறக்கி விடவுள்ளனராம்.
தேர்தல் பணியில் இறங்கியுள்ள அதிமுக சங்கரன்கோவிலில் கடந்த 7 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த மனோ கல்லூரிக்கு சொந்த இடம் தேர்வு செய்யவும் முன் வந்துள்ளது.
மேலும் கடந்த 16 ஆண்டுகளாக சங்கரன்கோவில் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த கருப்பசாமியால் செயல்படுத்தமுடியாத சில பணிகளை செய்வதிலும் தீவிரம் காட்டி வருகிறது. சுமார் 50 கோடிக்கும் மேலான திட்டங்களை செயல்படுத்திடவும் மறைமுக பணிகள் நடைபெற்று வருகிறது.
மொத்தத்தில் ஒட்டுமொத்த அதிமுகவின் கவனமும், உழைப்பும் இப்போது சங்கரன்கோவில் பக்கம் திரும்பியுள்ளால் அந்தத் தொகுதி மக்கள் ஜாக்பாட் அடித்தது போன்ற உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.
''பத்து மடங்கு திருமங்கலத்தை'' சங்கரன்கோவிலில் விரைவில் பார்க்கலாம் என்றும் விவரம் அறிந்தவர்கள் நமுட்டுச் சிரிப்புடன் கூறி வருகின்றனர்.