கடன் தகராறு : கடத்தப்பட்ட கமாண்டோ படை அதிகாரி!
சென்னை : சென்னையில் 2 லட்சம் ரூபாய் கடன் தகராறில், கடத்தப்பட்ட கமாண்டோபடை முன்னாள் போலீஸ் அதிகாரியை 30 மணிநேரத்தில் போலீசார் பத்திரமாக மீட்டனர். கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் செக்ïரிட்டி நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மானேஜர் மற்றும் பயிற்சி அதிகாரியாக பணிபுரிபவர் முரளிதரன் இவர் தேசிய கமாண்டோ பாதுகாப்பு படையின் முன்னாள் பயிற்சி அதிகாரி ஆவார். சென்னை அண்ணாநகரில் தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி வித்யா மற்றும் மகன் இவரை விட்டு பிரிந்து, கோவையில் தனியாக வாழ்கிறார்கள்.
கடந்த திங்கட்கிழமையன்று காலை 11 மணி அளவில் முரளிதரன் தனது அலுவலக வாசலில் நின்று கொண்டிருந்தபோது காரில் வந்த மர்மநபர்கள் கத்தி முனையில் முரளிதரனை கடத்திச் சென்றனர். இதை பார்த்து, அருகில் இருந்தவர்கள் முரளிதரன் வேலைபார்க்கும் செக்ïரிட்டி நிறுவனத்துக்கு தகவல் கொடுத்தனர். இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் ஆகியோர் உத்தரவின்பேரில், 4 தனிப்படையினர் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
கத்தி முனையில் கடத்தல்
இந்த நிலையில் 6-ந் தேதி மாலை 4 மணி அளவில், முரளிதரன் வேலைபார்த்த செக்ïரிட்டி நிறுவனத்துக்கு மர்ம ஆசாமி ஒருவன் போனில் பேசினான். முரளிதரனின் மனைவிக்கு உடல்நிலை சரி இல்லை என்றும், மனைவியை பார்க்க அவர் கோவைக்கு காரில் சென்றுள்ளார் என்றும், அவரை தேட வேண்டாம் என்றும், போனில் பேசியவன் தெரிவித்தான். செல்போன் எண்ணை வைத்து அது கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள, மலிகம்பட்டு என்ற ஊரில் இருந்து பேசியது தெரியவந்த்து. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், அங்குள்ள ஓட்டு வீடு ஒன்றில் முரளிதரனை அடைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பத்திரமாக மீட்டனர்.
உடனே கடத்தல்காரர்கள் முரளிதரனை விட்டு விட்டு, தப்பி ஓடினார்கள். அவர்களில் இருவரை போலீசார் பிடித்தனர். மீதி 4 பேர் காரில் தப்பி ஓடிவிட்டனர். முரளிதரன் சிறை வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் சந்திரசேகரன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்திரசேகரனின் மகன் முருகன் (38) என்பவர்தான் கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்டது தெரிய வந்தது.
பணத்திற்காக கடத்தல்
பட்டதாரியான முருகன் நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். முருகனுக்கு போலீஸ் வேலை வாங்கித்தருவதாக முரளிதரன், 2.5 லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாக தெரிகிறது. வேலையும் வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. பணத்தை வசூலிப்பதற்காக முரளிதரனை முருகன் கடத்திச் சென்றது தெரிய வந்தது.
முருகனுடன் அவரது தம்பிகள் ராஜேஷ், சரவணன், சரவணனின் நண்பர்கள் சண்முகம், இன்னொரு சரவணன் ஆகியோர் சேர்ந்து முரளிதரனை கடத்திச் சென்றதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. சரவணனின் நண்பர்கள் சரவணன், சண்முகம் ஆகியோர் போலீசில் மாட்டிக் கொண்டனர்.
அடித்து சித்ரவதை
கடத்தப்பட்ட முரளிதரன் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அப்போது கூறியதாவது.
எனது சொந்த ஊர் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம், பத்தேரி கிராமம் ஆகும். பி.காம். படித்து விட்டு, தேசியபாதுகாப்பு படை கமாண்டோ பிரிவில் பயிற்சி பிரிவில் வேலை பார்த்தேன். எனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நான் வேலையை விட்டு நின்று விட்டேன். அதன்பிறகு கடந்த 2 மாதங்களாக ஈகிள் செக்ïரிட்டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். என்னை கடத்திய முருகன் எனக்கு நல்ல நண்பர். அவரை போலீஸ் வேலையில் சேர்த்து விடுவதாக டி.ஜி.பி. அலுவலகத்தில் பணி புரிந்த நண்பர் ஒருவர் மூலம் ரூ.2.5 லட்சத்தை வாங்கினேன். டி.ஜி.பி. அலுவலக நண்பர் வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். இதனால் முருகனுக்கும், எனக்கும் பகையாகி விட்டது. இருந்தாலும், ரூ.30 ஆயிரம் பணத்தையும், லேப்-டாப் ஒன்றையும் வாங்கிய பணத்துக்காக கொடுத்தேன். மீதி பணத்தையும் சொந்த ஊரில் உள்ள எனது வீட்டை விற்று கொடுப்பதாக கூறி இருந்தேன். இதற்குள் என்னை முருகன் கடத்திச் சென்றுவிட்டார். என்னை கட்டிப்போட்டு அடித்தனர். போலீசார் என்னை மீட்காவிட்டால், என்னை கொன்று இருப்பார்கள். இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை
முரளிதரன் தோள்பட்டை, கை, முதுகு ஆகிய இடங்களில் ரத்தகாயத்துடன் காணப்பட்டார். அவரை பத்திரமாக போலீசார் மீட்டனர். நேற்று அதிகாலை அவரையும், கைதான 3 பேரையும் போலீசார் சென்னை கொண்டு வந்தனர். முரளிதரன் உடனடியாக தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.