வாரத்துக்கு 2 நாள் "மின்விடுமுறை" அளிக்க கோரிக்கை
கோவை: அறிவிக்கப்படாத மின்வெட்டுக்குப் பதிலாக 2 நாள் மின்விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக மின்வாரிய தலைமை அலுவலகத்துக்கு கோவை மின்வாரியம் பரிந்துரைத்துள்ளது.
தொடர் மின்வெட்டைக் கண்டித்து கோவை மின்வாரிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே மின்வாரிய தலைமை பொறியாளர் தங்கவேலு பேசியதாவது:
சென்னையில் 1 மணிநேரம் மட்டுமே மின்தடை உள்ளது. அதே நேரத்தில் கோவையில் 8 மணிநேரம் மின்தடை இருக்கிறது.
மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக மின்தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
மின் பற்றாக்குறையை கணக்கிடும்போது ஒரு நாள் போதாது. 2 நாட்கள் விடுமுறை அறிவிக்க வேண்டியது இருக்கும். மின்சாரம் தடை செய்யப்படும் நாட்கள், நேரம் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணைய அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
தற்போது நாளுக்குநாள் மின்தேவை அதிகரித்து வருகிறது. மேலும் கோடை காலம் ஏற்படுவதால் மின் தேவை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே கோவை கோட்டத்தில் மின் சிக்கன நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் தொழிற்சாலைகளில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை இரு முனை மின்சாரத்தை பயன்படுத்தக்கூடாது என்று வற்புறுத்தி உள்ளோம்.
தற்போது தேர்வு நேரம் என்பதால் மாணவ-மாணவிகள் இரவு நேரத்தில் கண்விழித்து படிப்பார்கள். மாணவர்களின் வசதிக்கு தக்கவாறு மின்சிக்கனத்தை மேற்கொள்ள உத்தேசித்துள்ளோம்.
இதற்காக வர்த்தக நிறுவனங்களை இரவு 8 மணிக்கு அடைத்து விடுவதற்கு பரிந்துரை செய்ய உள்ளோம்.
எக்காரணம் கொண்டும் தொழிற்சாலைகள் மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை இருமுனை மின்சாரத்தை பயன்படுத்தக்கூடாது என்று வற்புறுத்தியுள்ளோம் என்றார் அவர்.