மின்வெட்டு சரியாகும் வரை மின் கட்டணம் வசூலிக்கக் கூடாது: காங். எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
குளச்சல்: தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு சரியாகும் வரை மின் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று குமரி மாவட்டம் குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தினமும் ஐந்தரை மணி நேரம் மின்தடை என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் 12 மணி நேரம் மின்தடை ஏற்பட்டுள்ளது. எப்போது மின்தடை ஏற்படும் என்று நேரம் குறிப்பிடப்படவில்லை. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மின்தடை ஏற்படுகிறது. இரவு 8 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. ஆக மொத்தம் தினமும் 12 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. மின்சாரத்தை நம்பி தான் ஆலைகள், மக்களின் அத்தியாவசிய பணிகள் உள்ளன. மின்தடையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த வேண்டும். மக்கள் நலன், பாதுகாப்பை மத்திய அரசு கருத்தில் கொண்டு தான் செயல்படுகிறது. தமிழகத்தில் மின்வெட்டு சரியாகும் வரை மின்கட்டணம் வசூலிக்கக் கூடாது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பொறுப்பேற்ற பிறகு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படவில்லை என்றார்.