தேர்தல் ஆணைய தடையை மீறி சல்மான் குர்ஷித் பேச்சு- பாஜக எதிர்ப்பு
பரூககாபாத் (உத்தரப்பிரதேசம்): தேர்தல் ஆணையம் விடுத்த எச்சரிக்கையையும் மீறி சிறுபான்மையினர் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் அமைச்சர் பொறுப்பு வகிக்கும் சல்மான் குர்ஷித் அறிவிப்புகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
ஆனால் இதை சல்மான் குர்ஷித் நிராகரித்து பேசியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் பரூக்காபாத்தில் பேசிய சல்மான், சிறுபான்மையினர் உரிமை தொடர்பாக பேசுவதற்கு நான் யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை. சிறுபான்மையினரது உரிமை பற்றி பேசினால் எனக்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள். சிறுபான்மை ஆதரவு நிலைப்பாட்டிற்காக என்னை தூக்கில் வேண்டுமானால் போட்டுக் கொள்ளுங்கள் என்றார்.
குர்ஷித்தை நீக்குக!
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பல்பீர்புஞ்ச், நாட்டின் சட்ட அமைச்சராக இருந்து கொண்டு அரசியல் சாசன அமைப்பான தேர்தல் ஆணையம் பற்றி இப்படி பேசியிருப்பது துரதிர்ஷ்டமானது என்றார்.
இப்படி அரசியல் சாசன அமைப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் பேசும் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தை உடனடியாக அமைச்சர் பொறுப்பிலிருந்து பிரதமர் மன்மோகன்சிங் நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.