டெல்லியில், பிரதமர் வீடு அருகே இஸ்ரேல் தூதரக கார் வெடித்தது: 4 பேர் காயம்
டெல்லி: இஸ்ரேல் தூதரகத்திற்கு சொந்தமான எஸ்யுவி கார் பிரதமர் மன்மோகன் சிங்கின் வீட்டிற்கு அருகே வெடித்துச் சிதறியது. இதில் இஸ்ரேல் தூதரக பெண் அதிகாரி உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
இஸ்ரேல் தூதரகத்திற்கு சொந்தமான இன்னோவா எஸ்யுவி கார் பிரதமர் மன்மோகன் சிங் வீடு உள்ள ரேஸ்கோர்ஸ் ரோட்டில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ள ஒரு பெட்ரோல் பம்ப் அருகே திடீர் என்று வெடித்தது. இதில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இன்னொரு கார் சேதமைடந்தது. இந்த சம்பவத்தில் இஸ்ரேல் தூதரக பெண் அதிகாரி உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பெண் அதிகாரியின் நிலைமை மோசமாக உள்ளது.
முதலில் காரில் உள்ள சிஎன்ஜி சிலிண்டர் வெடித்தது என்று கூறப்பட்டது. ஆனால் அந்த கார் சிஎன்ஜி சிலிண்டரில் இயங்குவதில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது. எனவே, இது யாரையோ குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று தெரிய வந்துள்ளது.
பிரதமர் வீடு இருக்கும் பகுதி என்பதால் அங்கு எப்பொழுதுமே பலத்த பாதுகாப்பு உள்ளது. அப்படி இருக்கையில் நடந்துள்ள இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏறபட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
தூதரகக் கார் பின்னால் ஒருவர் பைக்கில் வந்ததாகவும், அந்த நபர் காரின் பின்னால் எதையோ பொருத்தியதாகவும், அது பேப்பர் குண்டாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.