திருவிழாவில் பஞ்சாயத்தைக் கூட்டிய திமுக..இன்விடேஷனில் நெப்போலியன் பெயர் போடாததற்குக் கண்டனம்!
கரூர்: குளித்தலை கடம்பர் கோவிலில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழா அழைப்பிதழில் மத்திய அமைச்சர் நெப்போலியனின் பெயர் போடாததர்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவி்த்துள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள பிரசித்தி பெற்ற கடம்பவனேஸ்வரர் திருக் கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 6 ம் தேதி தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படும்.
தைப்பூசத் திருவிழாவுக்கான அழைப்பிதழில் மாவட்டத்தில் உள்ள அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் போன்றவர்களின் பெயர்களை அச்சிடுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவுக்கான அழைப்பிதழில் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் குளித்தலை அதிமுக எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. காமராஜ் மற்றும் அதிமுக உள்ளாட்சி அமைப்புகளின் பிரநிதிகள் பெயர்கள் இடம் பெற்றதாம்.
ஆனால் பெரம்பலூர் தொகுதி திமுக எம்.பி.யும், மத்திய அமைச்சருமான நெப்போலியன், குளித்தலை நகராட்சி தலைவர் பல்லவிராஜா மற்றும் எதிர்கட்சிகளைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் பெயர்கள் இடம் பெறவில்லை என்றும், இது குறித்து மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து குளித்தலையைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர் தட்ஸ்தமிழுக்கு கூறியதாவது,
அரசு சார்பில் நடைபெறும் விழாவில் மக்கள் பிரதிநிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பாகுபாடு காட்டக் கூடாது. எங்களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் பெரும்பலூர் தொகுத்திக்குள் உள்ள பகுதியில் நடக்கும் அரசு விழாவில் மத்திய அமைச்சரே புறக்கணிக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கின்றது. பிற கட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரநிதிகளை அதிமுக அரசு எப்படி நடத்துகின்றது என்பதற்கு இந்த விழாவே ஒரு சாட்சி என்றார்.
ஆனால் இந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளிக்காமல் வழக்கம் போல் மவுனம் சாதித்து வருகின்றார் கரூர் மாவட்ட கலெக்டர் ஷோபனா.