15 நிமிடங்கள் அரசு மருத்துவமனை லிப்டில் சிக்கித் தவித்த அமைச்சர் விஜய்
சென்னை: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டிட திறப்பு விழாவுக்கு வந்த அமைச்சர் விஜய் 15 நிமிடங்கள் லிப்டில் சிக்கித் தவித்தார். இது குறித்து தகவல் அறிந்த பொதுப் பணித்துறையினர் அவரை மீட்டனர்.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்த அவசர கால சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை வார்டு ஆகிய கட்டிடங்கள் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. மேலும் புதிய காப்பீட்டுத் திட்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. இக்கட்டிடங்களின் திறப்பு விழா இன்று காலையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய் கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.
அதன்பிறகு முதல் மாடியில் உள்ள மற்ற வார்டுகளை பார்வையிட விரும்பிய அவர் லிப்டில் ஏற முயன்றார். ஆனால் லிப்ட் பட்டன் செயல்படவில்லை. சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு லிப்ட் பட்டன் வேலை செய்து கதவு திறந்தது.
லிப்டிற்குள் அமைச்சர் விஜய், சூப்பிரண்டு குணசேகரன், உதவியாளர் உள்ளிட்டோர் நுழைந்த உடன் கதவு மூடிக் கொண்டது. அதன்பிறகு கதவு திறக்கவேயில்லை. லிப்டில் சிக்கிய அமைச்சரை மீட்க மருத்துவமனை ஊழியர்கள் நடத்திய முயற்சி தோல்வியில் முடிந்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொதுப் பணித்துறையினர் லிப்ட் கதவை திறந்து அமைச்சர் விஜய்யை மீட்டனர். சுமார் 15 நிமிடங்கள் லிப்டில் சிக்கித் தவித்த அமைச்சர் வெளியே வந்த பிறகே மருத்துவமனை ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.