காதலர் தின எதிர்ப்பு: கழுதைக்கும் நாய்க்கும் திருமணம் செய்த இந்து முன்னணியினர் கைது
சென்னை: காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் கழுதைக்கும், நாய்க்கும் இந்து முன்னணியைச் சேர்ந்த 25 பேர் கூடி கல்யாணம் செய்து வைத்தனர். அவர்கள் அத்தனை பேரையும் போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி காதலர்கள் பரிசுப் பொருட்களை பரிமாறி கொண்டனர். சில காதலர்கள் ஜாலியாக ஊர் சுற்றினர். நிலைமை இப்படி இருக்க இந்து முன்னணியினர் காதலர் தினத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை ஆர்.கே.நகரில் கழுதைக்கும், நாய்க்கும் இடையே திருமணம் செய்து வைக்கப்பட்டது. அப்போது கழுதை மற்றும் நாய்க்கு அலங்காரம் செய்து, பெண் மாப்பிள்ளை சார்பாக தலா 4 பேர் வீதம் கலந்து கொண்டு மாலை மாற்றி திருமணத்தை நடத்தி வைத்தனர். திருமணத்தின்போது காதலர் தினத்தை எதிர்த்து கோஷமிட்டனர்.
இதேபோல புளியந்தோப்பு காந்தி சிலை அருகே 2 நாய்களுக்கு மாலை மாற்றி திருமணம் செய்து வைக்கப்பட்டது. இத்திருமணத்திற்காக அலங்கரிக்கப்பட்ட பெண் மாப்பிள்ளை நாய்கள் மேளதாளம் முழங்க, குதிரையில் ஏற்றப்பட்டு அழைத்து வரப்பட்டன. காதலர் தினத்திற்கு எதிர்ப்புதெரிவித்து நடத்தப்பட்ட மேற்கண்ட 2 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இந்து முன்னணி நிர்வாகிகள் 25 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.