பஸ் தினம் கொண்டாட உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு: சென்னை மக்கள் மகிழ்ச்சி
சென்னை: பஸ் தினம் கொண்டாட மாணவர்களுக்கு அனுமதி மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஸ் தினம் கொண்டாட அனுமதிக்காததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போலீசார் மற்றும் பொது மக்கள் மீது கற்கள் வீசித் தாக்கினர். இதனால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பஸ் தினம் கொண்டாட தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் சீனுவாசன் மற்றும் நேதாஜி போக்குவரத்து தொழிலாளர் பாதுகாப்பு கழகத்தின் தலைவர் தளபதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் இக்பால், சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பஸ் தினம் கொண்டாட ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பஸ் தினம் கொண்டாட மாணவர்களை அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பு சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.