பெங்களூர் நீதிமன்றத்தில் இன்று சசிகலா, இளவரசி ஆஜர்
முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது நண்பர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு 15 ஆண்டு கால இழுத்தடிப்புக்குப் பின் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. அண்மையில் இந்த வழக்கில் இருமுறை நேரில் ஆஜராகி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு வந்தார் ஜெயலலிதா.
இந் நிலையில் அவருடன் 20 ஆண்டுகளுக்கு மேலாக உடன்பிறவா சகோதரி என்ற அந்தஸ்தில் இருந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 15-க்கும் மேற்பட்டோர் போயஸ் கார்டன் மற்றும் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதற்கிடையே சசிகலாவிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளது பெங்களூர் தனி நீதிமன்றம். தனக்கு தமிழ் தவிர வேறு மொழி தெரியாது என்ற ஒரு காரணத்தைச் சொல்லியே 8 ஆண்டுகளுக்கு மேல் வழக்கை இழுத்தடித்து வந்தவர் சசிகலா. ஆனால் இனியும் வழக்கை இப்படி நீட்டிக்க முடியாது என அத்தனை நீதிமன்றங்களும் சொல்லிவிட்டன.
எனவே வேறு வழியின்றி இந்த முறை சசிகலா, இளவரசி ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் நேரில் விசாரணைக்கு ஆஜராகி வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை சசிகலாவிடம் விசாரணை நடந்தது. பல கேள்விகளுக்கு நினைவில்லை என்றும், தெரியாது என்றும் கூறிய சசிகலா, ஜெயலலிதா தொடர்பாக கேட்டபோது கதறி அழுதார்.
வங்கிக் கணக்கை நான் மட்டுமே இயக்கி வந்தேன். அதில் ஜெயலலிதாவும் கூட்டாளிதான். ஆனால் அதைப் பற்றிய எந்த விவரமும் அவருக்குத் தெரியாது. அவர் குற்றமற்றவர். தவறுக்கு நானே பொறுப்பு என்று கூறி சசிகலா கண்ணீர் விட்டு அழுதார்.
ஜெயா பப்ளிகேஷன்ஸ் விவகாரங்களை கவனித்துக் கொண்டது நான்தான் என்றும், ஜெயலலிதாவுக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் இரண்டாவது குற்றவாளி சசிகலா. முதல் குற்றவாளி ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இன்று சசிகலாவும் இளவரசியும் இந்த வழக்கில் மீண்டும் ஆஜராயினர்.