கொலைகார இத்தாலிய மாலுமிகள் இன்று கேரள நீதிமன்றத்தில் ஆஜர்
திருவனந்தபுரம்: நடுக்கடலில் தமிழக மீனவர்கள் இருவரை சுட்டுக் கொன்றதற்காக கைது செய்யப்பட்ட இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் 2 பேரும் இன்று கருணாகப்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
கேரளாவில் கொச்சி கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் 2 பேரை சுட்டுக் கொன்ற இத்தாலிய எண்ணெய் கப்பலைச் சேர்ந்த 2 கடற்படை வீரர்களை கேரள போலீசார் கைது செய்தனர். ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 3 நாள் போலீஸ் காவலுக்கு பின்னர் கருணாகப்பள்ளி நீதிமன்றத்தில் இன்று அவர்கள் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். இதற்கிடையே மீனவர்களை சுட பயன்படுத்தப்பட்ட துப்பாகிகளை கைப்பற்றும்படி கொல்லம் நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து துப்பாக்கிகளை கண்டுபிடிக்க இத்தாலிய கப்பலில் போலீசார் சோதனை நடத்த உள்ளனர். ஆனால் துப்பாக்கிச்சூடு தொடர்பாக இத்தாலியிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் துப்பாகிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை கேரள போலீசாரிடம் ஒப்படைக்க முடியாது என்று இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. ஆனால் துப்பாக்கிகளை கைப்பற்றாமல் விசாரணை நடத்த முடியாது என்பதால் அவற்றை பறிமுதல் செய்ய கேரள போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த கப்பலில் பயணங்கள் குறித்த ஆவணங்களும் முக்கியமானது என்பதால் அதையும் பறிமுதல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.